கோவையில் பாஜக தலைவர் அண்ணமலைக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டதால் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ளிட்ட இடங்களில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்தின் போது பேசிய டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு கூக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
தொண்டர்கள் கூச்சலிட்டவுடன் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும், நேற்று தேனியில் பிரசாரம் மேற்கொண்டதால் சிறிது குழப்பம் அடைந்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும், மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி செய்கிற தீய சக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.