கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கைவிரலை துண்டித்துக் கொண்ட பா.ஜ.க. பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். இவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார்.
கோவையில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த 10 நாள்கள் முன்பு கோவை வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், கோவையில் அண்ணாமலைதான் வெற்றி எப்ற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனிருந்த பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து துறை ராமலிங்கம் கூறும் போது:-
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்றார்.
அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா பிரமுகர் கைவிரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.