காரைக்குடி: தமிழகத்தில் இந்தியா கூட்டணி புதுச்சேரி உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல் வாக்காளராக ப. சிதம்பம் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் எனது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். நான் இங்கு வாக்களித்துள்ளேன்.
தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை.
நான் நேற்று தொகுதியில் சுற்றி வந்தேன். இன்று காலையில் அனைத்து முதல்வர்களிடமும் தொலைபேசியில் பேசியிருக்கிறேன். மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். அந்த உற்சாகம், நம்பிக்கை, பூரிப்பு என்பது வாக்காளர்கள் மத்தியில் பிரதிபலிப்பதாக இருக்கும். நிச்சயமாக இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்தியா கூட்டணி வென்றால் பன்முகத் தன்மை உறுதியாக காப்பாற்றபடும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை எல்லாம் சீர் செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்.
அனைத்து மதம், சமுதாயம் அவர்களது பழக்க வழக்கங்கள், கலாசாரம் எல்லாவற்றையும் காப்பாற்றுவது தான் பன்முகத்தன்மையை காப்பாற்றுவது என்று பொருள். அதை நிச்சயமாக இந்தியா கூட்டணி அரசு செய்யும் என்றார்.
அந்த வாக்குச்சாவடியை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பார்வையிட வந்த போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும். தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இந்தியாவில் பன்முகத் தன்மையை இந்தியா கூட்டணி அரசு காப்பாற்றும் என்றார்.