ஒடிஸாவில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஜூன் 10-ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக வருகின்ற மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அரசியல் கட்சிகளின் பிரசாரம் அம்மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெஹ்ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது பிஜு ஜனதா தளத்தை விமர்சித்து மோடி பேசியதாவது:
“ஒடிஸாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமைவதற்கு, மற்றொன்று ஒடிஸாவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதற்கான மாற்றம். ஒடிஸாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமையவுள்ளது உங்களின் உற்சாகத்தில் தெரிகின்றது.
ஜூன் 4, பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள். அன்றைய தினம் பாஜகவின் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். புவனேஷ்வரில் ஜூன் 10-ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
ஒடிஸாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. ஒடிஸாவில் தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளன. இருப்பினும், ஒடிஸா மக்கள் ஏன் ஏழைகளாக உள்ளனர்?
காங்கிரஸும் பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிஸா மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளத்தின் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தகாரர்களாக உள்ளனர்.” என்று விமர்சித்தார்.