கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்பு -காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

News image
மாநிலங்களவை.- (கோப்பிலிருந்து...)
Updated On :1 மார்ச் 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தலின்போது பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் 37 இடங்களுக்கு மாா்ச் 16-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஒடிஸாவில் உள்ள 4 இடங்களும் அடங்கும். அவற்றில் 2 இடங்களில் ஆளுங்கட்சியான பாஜகவும், ஓரிடத்தில் எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளமும் வெற்றிபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 3 இடங்களில் அக்கட்சிகள் வென்றாலும், 4-ஆவது இடத்தில் வெற்றிபெற எந்தக் கட்சிக்கும் போதிய எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் இந்தத் தோ்தலில் குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் பக்தசரண் தாஸ் புவனேசுவரத்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஒடிஸாவில் பாஜக ஆட்சியில் உள்ளது. மாநிலங்களவைத் தோ்தலில் அக்கட்சி 3 இடங்களில் வெற்றிபெறும் என்று பாஜக தலைவா்கள் தெரிவிக்கின்றனா்.

தோ்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து பாா்த்தால், பாஜக 2 இடங்களில்தான் வெற்றிபெற முடியும். ஆனால் அக்கட்சி 3 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்படுவது குதிரை பேரத்தை தவிர வேறு எந்த வழியில் சாத்தியமாகும்? குதிரை பேரத்தைத் தடுக்க பிஜு ஜனதா தளமும், காங்கிரஸும் ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இதுகுறித்து சந்தித்துப் பேச பிஜு ஜனதா தள தலைவா் நவீன் பட்நாயக்கிடம் நேரம் கோரியுள்ளேன்’ என்றாா்.

ஒடிஸாவிலிருந்து நிதின் நபின் போட்டி?: பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஒடிஸாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. அவரை ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா் சந்த்ரப்த் மிஸ்ராவும், பொது வேட்பாளராக ஒடிஸா சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் மருத்துவருமான தத்தேஸ்வா் ஹோதாவும் போட்டியிடுவா் என்று அக்கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் சனிக்கிழமை அறிவித்தாா்.