/

செளமியாவுக்கு வாக்களிக்காதீர்கள்! ராமதாஸ் வேண்டுகோள்

அன்புமணி பாமகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ராமதாஸ் வேண்டுகோள்...

News image

ராமதாஸ் - X

Updated On :20 ஏப்ரல் 2026, 12:20 pm

தருமபுரியில் பாமக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் செளமியா அன்புமணிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு எதிராக ராமதாஸ் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

”என் வயிற்றில் பிறந்த அன்புமணி எனக்கும் எனது கட்சிக்கும் செய்த துரோகங்களை சொன்னால் மணிக்கணக்கில் சொல்ல வேண்டும். இந்த துரோகக் கும்பலுக்கு வாக்களிக்காதீர்கள். சேவை அளிக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம் அல்ல. அதிகாரத்துக்காகதான் நிற்கிறார்கள்.

18 தொகுதிகளிலும் போட்டியிடும் துரோகக் கூட்டத்துக்கு வாக்களிக்க வேண்டாம். அனைவரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான் வாக்காளர்களாக நிற்கிறார்கள். ஆனால், தற்போது அன்புமணியுடன் இணைந்து தவறான கூட்டணியில் போட்டியிடுகிறார்கள்.

மக்களவை, சட்டப்பேரவை என அனைத்து தேர்தல்களிலும் அன்புமணி அவரது மனைவியை நிறுத்துகிறார். இவர் நேராக களம் காண வேண்டியது தானே? நாட்டிலேயே மிகக் குறைவாக நாடாளுமன்றம் சென்றவர் அன்புமணிதான்.

தருமபுரி சட்டப்பேரவைத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் சரவணத்துக்கு வாக்களித்து தேர்ந்தெடுங்கள். எதிர்த்துப் போட்டியிடும் செளமியா பணத்துக்காக அதிகாரத்துக்காக போட்டியிடுகிறார். அவருக்கு பாட்டாளி மக்கள் சொந்தங்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Do Not Vote for Sowmiya Anbumani! — Ramadoss Appeals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.