மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!

திமுக கூட்டணியில், 8 தொகுதிகளைப் பெற்றது ஏன்? என்பது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதைப் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன்.

எக்ஸ்.

Updated On :24 மார்ச் 2026, 8:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக கூட்டணியில், 8 தொகுதிகளைப் பெற்றது ஏன்? என்பது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உறுதிசெய்யப்பட்ட பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், விசிக 6 இடங்களில் தனித்தொகுதியிலும், இரண்டு இடங்களில் பொதுத் தொகுதியிலும் போட்டியிடுகிறது.

கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த எட்டு ஆண்டுகளாக ஒத்த கருத்தியலோடு செயல்படுகிற கூட்டணி எங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய மதவாத, சாதிவெறி சக்திகள், வலதுசாரி சக்திகள் வலுப்பெறுவதைத் தடுக்க வேண்டும். நாட்டையும் மக்களையும் மதவாத வெறுப்பு அரசியலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என செயல்படும் கூட்டணி எங்கள் கூட்டணி.

இந்தக் கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி, கூட்டணியில் உள்ள நல்லவை, கெட்டவைகளை சீர்தூக்கிப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகளின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியில் நலனும் முக்கியம் என கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு விசிக உடன்பட்டிருக்கிறது. தொடர்ந்து திமுகவுடன் பயணிப்பதற்கு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பயணிப்பதற்கு இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழ் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

வலதுசாரி பிற்போக்கு அரசியல் வலுப்பெற்றுவிடக்கூடாது, காலூன்றி விடக்கூடாது, அது தமிழ்நாட்டுக்கும் இந்திய தேசத்துக்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கிறோம்.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் பாடுபடுவோம். தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவோடு இந்தக் கூட்டணி வெற்றி பெறும்.

ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக முரண்டுபட்டு கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி, வெற்றிக்கான வாய்ப்பை சேதப்படுத்திவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இதில் எங்களுக்கு மனநிறைவு இருக்கிறது.

விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், இடதுசாரி அரசியலை திமுக பாதுகாப்பதாகவே நான் கருதுகிறேன். வருகிற தேர்தலில் 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் தான் விசிக போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, திமுக - விடுதலைச் சிறுத்தைகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த, விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையொப்பமானது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தனித் தொகுதிகளிலும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

Summary

After the seat-sharing arrangement within the DMK alliance was finalized, Viduthalai Chiruthaigal Katchi leader Thol. Thirumavalavan met with reporters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.