/

வேட்புமனு டெபாசிட் தொகையை 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்களாக எடுத்துவந்த நாம் தமிழர் வேட்பாளர்!

கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் பேரறிவாளன் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்களுடன் வந்து டெபாசிட் செய்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image

நாம் தமிழர் வேட்பாளர் பேரறிவாளன்.

Updated On :30 மார்ச் 2026, 9:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் பேரறிவாளன் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்களுடன் வந்து டெபாசிட் செய்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர் டெபாசிட் தொகை 10,000 ரூபாயையும் 10 ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களைக் கொண்டு வந்து கட்டினார்.

மேலும் அவருடன் வந்த கட்சியினர் அவரது முகமூடியை அணிந்த வண்ணம் வந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து பேட்டி அளித்த வேட்பாளர் பேரறிவாளன், கோவை தெற்கு தொகுதி, கோவை மாவட்டத்தின் முக்கியமான தொகுதி. இங்கு திமுக சார்பில் செந்தில் பாலாஜி, அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகின்றனர். இருவரும் ஊழல் முதலைகள், பண முதலைகள் என விமர்சித்தார்.

செந்தில் பாலாஜிக்கு ஒரே ஒரு சவால் விடுகிறேன். ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், இலவச பொருட்கள் கொடுக்காமல் என்னை விட ஒற்றை வாக்கு அதிகமாக பெற்றால் நான் பொது வாழ்க்கையை விட்டு வெளியேறி திமுகவில்கூட இணைந்து விடுகிறேன் என்றார். செந்தில் பாலாஜி மது பாட்டலுக்கு பத்து ரூபாய் அதிகம் பெற்றார். அதனால்தான் பத்து ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களைக் கொண்டு வந்து டெபாசிட் செய்கிறேன். அது அவருக்கு உறுத்த வேண்டும் என்றார்.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் அவரும் கோவையில் மிகப்பெரிய ஊழல் செய்தவர். அதனால் தான் கடந்த ஆண்டு அவரது இல்லத்தில் ரெய்டு நடத்தினார்கள். அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் என்னை விட அதிக வாக்குகள் பெற்றால் நான் அவர்கள் கூறும்படி ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து விடுகிறேன் என்றார்.

நான் அவர்களைப் போன்று கோடீஸ்வரன் அல்ல, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன் எனக் கூறிய அவர் தெற்கு தொகுதியில் இரண்டு பேருக்கு தான் போட்டியே, ஒன்று செந்தில் பாலாஜி மற்றொன்று இந்த பேரறிவாளன் என்றார். பெருந்தலைவர் காமராஜரையே ஒரு இளைஞன் தான் தோற்கடித்தான் என்றும் அப்படி இருக்கும் பொழுது செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர், எனவே மக்கள் தன்னை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறினார்.

செந்தில் பாலாஜி கோவையில் ஜெயித்தால் டாஸ்மாக் கடையை விட 11 டூ 11 மதுபான கடைகள்தான் அதிகம் வரும் என்றும் கூறினார்.

Summary

Perarivalan, the Naam Tamilar Katchi candidate for the South constituency, filed his nomination by paying the deposit amount in ten-rupee notes and coins.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.