உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கட்சியில் இணைந்த இரண்டே நாளில் சீட்: அதிருப்தியில் தவெக தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இரண்டே நாளில் இருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பது, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News image

தவெக தொண்டர்கள்

கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இரண்டே நாளில் இருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பது, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தவெக இருக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள், புதிய வாக்காளர்களின் கவனத்தை அக்கட்சி பெற்றது. சமூக மாற்றம், ஊழல் எதிர்ப்பு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி என்ற விஜய்யின் பேச்சு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு, அதுதொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் திரைப்படத்துக்கு நெருக்கடி எனப் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே சட்டப்பேரவைத் தேர்தலை விஜய் தலைமையில் தவெக எதிர்கொள்கிறது. இந்த இக்கட்டான சூழலிலும் அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் விஜய்க்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதில் இரண்டு நாள்களுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் டி.ஏ.பி. செந்தில்பாண்டியன் என்பவருக்கு, அவர் தவெகவில் இணைந்த இரண்டாம் நாளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வி. வீரமணி என்பவருக்கு திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

"கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல், இரண்டு நாள்களுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களை முன்னிலைப்படுத்தினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். இந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிசெய்ய, கட்சியின் தலைமை தெளிவான விளக்கம் அளிப்பது அவசியம்' என்று தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

-பா. லெனின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.