பாலக்கோடு: நேரடியாகக் களம் காணும் அதிமுக- திமுக

இத்தொகுதியில் கடந்த முறை போலவே இம்முறையும் அதிமுக- திமுக நேரடியாகக் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று பாலக்கோடு தொகுதி. இத்தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை மலைப்பகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் கடந்த முறை போலவே இம்முறையும் அதிமுக- திமுக நேரடியாகக் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,19,046
பெண்கள்:  1,16,025
மூன்றாம் பாலினம்: 18
மொத்தம்:  2,35089.

தொகுதி அமைப்பு:

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களையும், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய மூன்று பேரூராட்சிகளையும் பாலக்கோடு தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழகத்திலேயே குறிப்பிடும்படியாக கூட்டுறவு கூட்டுறவு சர்க்கரை ஆலையை இத் தொகுதி பெற்றுள்ளது.  தும்பலஅள்ளி அணை, சின்னாறு அணை ஆகிய இரு அணைகளும் இங்கு அமைந்துள்ளது. இப்பகுதியில் தென்னை, பனை, வாழை, மலர்கள், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. 

சமூக நிலவரம்:

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் வன்னியர் சமூகமும், இதற்கு அடுத்ததாக கொங்கு வேளாளர், ஆதிதிராவிடர், பழங்குடி மக்களும் வாழ்கின்றனர். பாலக்கோடு பேரூர் பகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதேபோல, பரவலாக கிறிஸ்தவர்களும், மொழி சிறுபான்மையினரும் வசிக்கின்றனர்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை, அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளன. இதேபோல, கொமதேக, இஸ்லாமிய அமைப்புகள் பரவலாக அமைப்புகளைக் கொண்டுள்ளன.

கடந்த தேர்தல்களின் நிலவரம்:

பாலக்கோடு பேரவைத் தொகுதி கடந்த 1967 முதல் கடந்த 2016 வரை 12 பொதுத் தேர்தல்களைச் சந்திந்துள்ளது.இத் தேர்தல்களில் கடந்த 1989 இல் வெற்றி பெற்ற அதிமுக (ஜெ) அணியை சேர்த்தால் மொத்தம் எட்டு முறை அதிமுக வென்றுள்ளது. இதேபோல, திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா இரண்டு முறை வென்றுள்ளன.

பாலக்கோடு பேரவைத் தொகுதியில் கடந்த 2016-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் மொத்தம் 76,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தொடர்ந்து நான்கு முறை இப்பேரவைத் தொகுதியில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தற்போது உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். 

கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.முருகன் 70,160 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாமக சார்பில் கே.மன்னன் போட்டியிட்டு 31,612 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட காவேரிவர்மன் 4,915 வாக்குகளை பெற்றார்.

2016 தேர்தல் நிலவரம்:

கே.பி.அன்பழகன் (அதிமுக): 76,143 (40.3% ) வெற்றி.
பி.கே.முருகன் (திமுக): 70,160 (37.17%)
மன்னன் (பாமக): 31,612 (16.75%)
காவேரி வர்மன் (தேமுதிக): 4,915 (2.6%).

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

பாலக்கோடு பேரவைத் தொகுதியில் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்தஅலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம், தென்பெண்ணை ஆற்றில் எண்ணேகொல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம், ஜர்த்தலாவ் ஏரியிலிருந்து புலிகரை ஏரிக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் ஆகிய மூன்று மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான், இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதேபோல, காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடக்கம், பாலக்கோட்டில் அரசு கலைக் கல்லூரி தொடக்கம், காரிமங்கலம் அருகே ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் தொடக்கம், பாலக்கோடு கல்வி மாவட்டம் உருவாக்கம், காவல் உள்கோட்டம் உருவாக்கம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்கள் எதிர்பார்ப்பு:

தக்காளி விவசாயிகளின் நலன் கருதி, தக்காளி கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். விலை வீழ்ச்சிக் காலங்களில் ஏற்படும் இழப்பைத் தடுக்க, தக்காளிச் சாறு மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட கரும்பு அரவையை மீண்டும் தொடங்கி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயங்கச் செய்ய வேண்டும். கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு சிறப்பு மானியத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

சாமந்தி உள்ளிட்ட மலர்ச் சாகுபடியை ஊக்குவிக்க வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும். நிலுவையிள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சின்னாற்றுப் படுகையில் மணல் திருட்டைத் தடுத்து நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் ஆகியவை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளன.

கட்சிகளுக்கான வாய்ப்பு:

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பலமாக வாங்கு வங்கியைக் கொண்டுள்ளன. இவற்றில், கடந்த முறை மூன்றாவது இடம் பிடித்த பாமக தற்போது அதிமுக அணியில் இருப்பதால், அக்  கூட்டணிக்கு கூடுதல் பலம். 

இதேபோல, கடந்த முறை 37.17 சதவீதம் வாக்குகளை பெற்ற திமுகவுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், கொமதேக ஆகியவை அதன் கூட்டணியில் இருப்பது பலமாகக் கருதப்படுகிறது. கடந்த முறை போலவே இம்முறையும் அதிமுக - திமுக நேரடியாக இத் தொகுதியில் களம் காண வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com