/

5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்! - திமுகவை விமர்சித்த இபிஎஸ்!

2021 தேர்தலில் அதிமுக - பாமக இணைந்து 100% வெற்றி பெற்றது தருமபுரி மாவட்டத்தில்தான் என இபிஎஸ் பேச்சு...

News image

பிரசாரத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமி

யூடியூப் / அதிமுக

Updated On :2 ஏப்ரல் 2026, 2:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடியை திமுக அரசு கடன் வாங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவ எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பாமக வேட்பாளர்கள் தருமபுரி செளமியா அன்புமணி, பென்னாகரம் பாடி செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 2) தருமபுரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''2021 தேர்தலில் அதிமுக, பாமக இணைந்து 100% வெற்றியை பெற்ற மாவட்டம் தருமபுரிதான். அதே வெற்றியை இம்முறையும் தருமபுரி மக்கள் உறுதி செய்ய வேண்டும். திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.

அண்ணாநகர் சிறுமி வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அதிமுக ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார்? என்பது கண்டுபிடிக்கப்படும்.

போதைப்பொருள்களால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கின்றன. கஞ்சா, போதைப்பொருள்களால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.

கடன் வாங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது திமுக அரசு. மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசை துடைத்தெறிய வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.