பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேரவைத் தேர்தல்! 3 மணி நேர மலையேற்றம்; 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி!

பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது, இப்போது 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி பற்றிய தகவல் ..

News image
வாக்குச்சாவடி - பிரதிபடம்- DPS - File photo
Updated On :16 மார்ச் 2026, 7:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேனி: ஐந்து மாநில பேரவைத் தேர்தலில், மிகவும் சிரமப்பட்டு அடைய வேண்டிய வாக்குச்சாவடிகளை வரிசைப்படுத்தியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில், தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு வாக்குச்சாவடி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள வாக்குச்சாவடியை தேர்தல் அதிகாரிகள் அடைவதற்கு, பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் இது தேர்தல்தோறும் அதிக கவனம் பெறும் வாக்குச்சாவடியாகவும் உள்ளது.

வெள்ளிமலை தோட்டத்தில், வருசநாடு மலைப் பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், மாநிலத்தின் 245வது வாக்குச்சாவடி அமையும்.

இந்த வாக்குச்சாவடியானது, ஆண்டிப்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் பசுமையான எழில் சூழ்ந்த பகுதியில் ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இங்கு வாழ்கிறார்கள். தற்போது, இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களாக 3 ஆண்கள், 2 பெண்கள் என ஐந்து பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கால்நடைகள் மூலமாக மலை மீது கொண்டு செல்லப்படுகிறது. மிக அடர்ந்த வனப்பகுதி வழியாக மலையேறித்தான் அதிகாரிகள் வாக்குச்சாவடியை அடைய முடியும்.

ஆண்டிப்பட்டியிலிருந்து வெள்ளிமலைக்கு 3 மணி நேரங்கள் மலைப்பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதுவும் கரடுமுரடான பாறைகள் செங்குத்தான பாதை என தேர்தல் அதிகாரிகளுக்கு கடும் சவாலாகவே இருக்கும். வாகனங்கள் செல்ல முடியாததால், கால்நடைகளில்தான் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த வாக்குச்சாவடிக்கு என சில குறிப்பிட்ட அதிகாரிகளைத்தான் மாவட்ட அரசு அதிகாரிகள் நியமிப்பார்கள். இந்தப் பாதையில் நன்கு பழக்கப்பட்ட அதிகாரிகளை அனுப்பினால் மட்டுமே வாக்குச்சாவடிக்கு விரைவாக செல்ல முடியும், வாக்குப்பதிவும் சுமூகமாக நடந்து முடியும் என்று நம்பப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகள் மட்டுமல்ல, வாக்காளர்களும்கூட, அவர்கள் வாழும் பகுதியிலிருந்து, இந்த வாக்குச்சாவடியை மோசமான மலைப் பாதையைக் கடந்துவந்துதான், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறார்கள்.

தரையிலிருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய வாக்குச்சாவடிகளில் இதுவும் ஒன்று. கடந்த 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது இங்கிருந்த 17 வாக்காளர்களில் 14 பேர் வாக்களித்து 82.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது இங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. அதில் 4 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இது 66.6 சதவிகித வாக்குப்பதிவு என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.