சென்னை, ஜூன். 10 - சென்னை - திருவள்ளூர் ரயில் சர்வீசை மின்சாரமயமாக்கும் திட்டம், ஏற்கனவே திட்டமிட்டபடி 1979-80ல் முடிவடையும் என்ற நம்பிக்கையை யூனியன் ரயில்வே மந்திரி கமலாபதிதிரிபாடி இன்று சென்னையில் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இங்கு வந்துள்ள அவர் சென்ட்ரல் ரயில்வே நிர்வாக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சென்னை - திருவள்ளூர் ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டப்பணி மந்தப்படுத்தப்பட்டுள்ளது அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற கருத்து யார் மனதிலாவது ஏற்பட்டிருக்குமானால் அது அடியோடு தவறானதாகும் என்று குறிப்பிட் டார்.
இத்திட்டம் ரூ. 6 கோடி ரூபாய் செலவில் வகுக்கப்பட்டது. ஏற்கனவே ரூ. 35 லட்சம் வரையில் இப்பணியில் செலவிடப்பட்டிருக்கிறது.
"இது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் நிதி தேவைப்படுகிறது. மேற்கொண்டு அதிக நிதிக்காக திட்ட கமிஷனிடம் அணுக இருக்கிறோம்'' என்று அமைச்சர் தெரிவித்தார்.
இம்மாதம் 14-ம் தேதி திட்டக் கமிஷனின் கூட்டம் நடைபெறும் போது, ரயில்வே அமைச்சகம் தன்னுடைய பல அபிவிருத்திதிட்டங்களைப் பற்றி விவரித்து மேற்கொண்டு நிதி ஒதுக்கீட்டிற்காக பிரேரணைகளை முன்வைக்கும் என்று அவர் சொன்னார்.
சென்னை - திருவள்ளூர் மின்மயமாக்கும் பணியில் கைகாட்டி மரங்கள் அமைப்பது, தகவல் தொட ர்பு வசதிகள் சம்பந்தப்பட்டபணிகள் யாவும் திட்டமிட்டபடி முன்னேறி வருகின்றன. ஏற்கனவே திட்டமிட்ட இலக்குபடி (1979 - 80) இத்திட்டம் பூர்த்தியடையும் என்று அமைச்சருடன் இருந்த, தென் ரயில்வே ஜெனரல் மானேஜர் எஸ். எம். கவுரிசங்கர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டுக்கு ரூ. 18,000 தான் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாயினும், இந்த திட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு செயலாற்றுதலுக்கு எடுத்துக் கொண்டு விடப்பட்ட திட்டமாகும். இது திட்டமிட்டபடி நிறைவேறும் என்று அமைச்சர் உறுதி கூறினர். ...
அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர் பொறுப்பு பற்றி பிரதமர் இந்திரா
மாஸ்கோ, ஜூன். 10- வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரும் தம் நாட்டின் பெருமையைப் பரப்ப உதவும் தூதர்களாவர் என்று பிரதமர் இந்திரா காந்தி கூறினார். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாவிடில், ஸ்தானிகர்களால் கூட வெற்றிகரமாக செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார்.
மாஸ்கோவில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டத்தில் பிரதமர் இன்று பேசினார்.
இந்தியாவில் பிற்போக்கு சக்திகளின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது என்றும், இருப்பினும் அவை இன்னமும் இருந்து வருகின்றன என்றும், அவற்றுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவி கிடைத்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார். அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு இந்தியாவிலுள்ள நிலைமை பற்றி அவர் பேசினார். "எனவே போராட்டம் இன்னமும் முடியவில்லை " என்றார்.
இந்தியா சமாளிக்க வேண்டிய பிரச்னைகளைக் கவனிக்கையில் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றார். இப்படிச் சொல்லும் போது காங்கிரசுக்கு "ஷொட்டு" கொடுப்பதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்றும், இந்தியாவை இன்றுள்ள நிலைமைக்குக் கொண்டுவந்தவர்கள் மக்கள்தான் என்றும் பிரதமர் சொன்னார்.
இக்கூட்டத்திற்கு இந்தியத் தூதர் ஐ.கே. குஜ்ரால் தலைமை வகித்தார். மந்திரிகள் சவாணும், சங்கர் கோஸும் இதில் கலந்து கொண்டனர். ...
Summary
11.6.1976: Chennai–Tiruvallur electric train project to be completed in 1980.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










