சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

திருப்பரங்குன்றம் கோயிலில் மயில்களைக் காண வசதி

திருப்பரங்குன்றம்,ஏப்.20: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மயில்கள் உணவுக்காக வெளியே செல்வதைத் தடுக்க, இயற்கைச் சூழ்நிலையில் குளம் மற்றும் தானிய மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மயில்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:15 am IST

திருப்பரங்குன்றம்,ஏப்.20: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மயில்கள் உணவுக்காக வெளியே செல்வதைத் தடுக்க, இயற்கைச் சூழ்நிலையில் குளம் மற்றும் தானிய மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மயில்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என கோயில் அதிகாரி தெரிவித்தார்.

 திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படைவீடாக சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

 இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்தின்கீழ் இசை நீரூற்று, திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பணிகள் ரூ 3.87 கோடியில் நடைபெற்று வருகின்றன.

 இப்பணிகளின் ஒருபகுதியாக, கோயில் அருகே வனப்பகுதியில் அரியவகையான நான்கு வெள்ளை மயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான மயில்கள் வசித்து வருகின்றன. இவற்றிற்கு போதுமான இரை இல்லாமல் இருப்பிடத்தைவிட்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.

 இதனைத் தடுக்கும் பொருட்டு தற்போது பூங்கா அமைக்கும் பணியோடு மயில்கள் தண்ணீர் குடிக்க இயற்கையான முறையில் குளம் அமைக்கவும், இரைக்காக தானிய மேடையும் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மயில்களை பொதுமக்கள் பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து நிர்வாக அதிகாரி இரா.செந்தில்வேலவன் கூறியது:

 ""மயில்கள் இரைக்காக வெளியே செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் மயில்கள் சில நேரங்களில் வெறிநாய்களால் கடிபட்டு இறந்துள்ளன. இந்த நிலையைப் போக்க வனப்பகுதியிலேயே இயற்கையான முறையில் குளங்களையும், தானிய மேடையையும் அமைத்துள்ளோம்.

 தற்போது நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் பூங்கா கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன், பாதுகாப்பு வேலி அமைத்து பொதுமக்கள் மயில்களைப் பார்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.