தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்: பாஜக படுதோல்வி

பெங்களூர்,கர்நாடக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 7-ல் 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக, மஜத கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Updated On :11 மார்ச் 2013, 8:50 pm

கர்நாடக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 7-ல் 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக, மஜத கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி,  ஸ்ரீராமுலுவின் பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை.

கர்நாடகத்தில் 7 மாநகராட்சிகள், 43 நகராட்சிகள், 93 பேரூராட்சிகள், 65 நகரப் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட 208 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில், 66.25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மொத்தமுள்ள 4,976 வார்டுகளில் 1,960 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் முதலிடம் பிடித்தது.

 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1606 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. கடந்த தேர்தலைக் காட்டிலும் 354 வார்டுகள் கூடுதலாகப் பெற்று, காங்கிரஸ் வெற்றிக்கனியைப் பறித்துள்ளது.

7 மாநகராட்சிகளில் தாவணகெரே, மங்களூர், பெல்லாரி, குல்பர்கா ஆகிய 4 மாநகராட்சிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

ஆளும் பாஜக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சி 905 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் சொந்த மாவட்டமான தார்வாடில் ஹூப்ளி மாநகராட்சியை மட்டும் பாஜக கைப்பற்றியுள்ளது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கடலோர மாவட்டங்களிலும் மங்களூர், உடுப்பியில் அந்தக் கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது. பாஜகவின் வெற்றிகளை எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி சீர்குலைத்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கர்நாடக ஜனதா கட்சி 1,966 வார்டுகளில் போட்டியிட்டு, 274 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, பாஜகவில் இருந்து பிரிந்து ஸ்ரீராமுலு தொடங்கிய பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி  1,496 வார்டுகளில் போட்டியிட்டு, வெறும் 86 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.