/

"தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: விரைவில் நடவடிக்கை'

தனியார் வங்கிகளில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஆய்வு முடிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர்.கான் கூறியிருக்கிறார்.

Updated On :11 ஏப்ரல் 2013, 7:51 pm

தனியார் வங்கிகளில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஆய்வு முடிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர்.கான் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை, கடும் விதிமுறை மீறலாக வாடிக்கையாளர்களிடமிருந்து தகுந்த விவரங்களைப் பெறாமல் பெரும் தொகைகளைப் பெற்று வைப்பு நிதிகளில் சேமிக்கின்றன என்று ஒரு இணையதள செய்தி கடந்த மாதம் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வங்கிகளின் கிளைகளில் ரிசர்வ் வங்கி ஆய்வு மேற்கொண்டது. புது தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர்.கானிடம் ஆய்வு விவரங்களைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியது:

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் ஆய்வு முடிந்துவிட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளின் நிதி செயல்பாடு ரீதியாகவும், குறிப்பிட்ட வங்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர எத்தனை காலம் பிடிக்குமென்று இப்போது கூற முடியாது. ரிசர்வ் வங்கியின் விசாரணை அறிக்கை எப்போது வெளிவரும் என்பதையும் கூற இயலாது என்று அவர் தெரிவித்தார்.

இணையதள செய்தியாளர் ஒருவர் அளித்த பெரும் தொகைகளை, மூன்று தனியார் வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் தகுந்த விவரங்கள் கேட்காமல் தங்களது வங்கிகளில் நீண்ட கால வைப்புத் தொகையாக சேமிப்பதற்காக பெற்றுக் கொண்டனர். இந்த முறையால் கருப்பு பணம், வெள்ளையாக மாற்றப்படக் கூடிய சாத்தியம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் 18 ஊழியர்கள், எச்டிஎஃப்சி வங்கியின் 20 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக, ஆக்ஸிஸ் வங்கி தனது 16 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.