தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மோசடி நிதி நிறுவனங்களை தடுக்க அரசு பரிசீலனை: செபி

மோசடி நிதி நிறுவனங்கள் முறைகேடான வழிகளில் முதலீடுகளைத் திரட்டுவதைத் தடுப்பதற்கு சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக "செபி' அமைப்பின் தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

Updated On :1 மே 2013, 8:23 pm

மோசடி நிதி நிறுவனங்கள் முறைகேடான வழிகளில் முதலீடுகளைத் திரட்டுவதைத் தடுப்பதற்கு சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக "செபி' அமைப்பின் தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு லட்சக்கணக்கானோரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றது. முதிர்ச்சிக்காலம் முடிந்தும் அவர்களுக்குப் பணத்தை திருப்பித் தராதது குறித்து போலீஸில் புகார்கள் குவிந்து வருகின்றன. இதேபோல் நாடு முழுவதும் இயங்கி வரும் மோசடி நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரி வருகின்றனர்.

இது குறித்து, "செபி' எனப்படும் இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் யூ.கே.சின்ஹா, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: மக்களிடம் இருந்து முறைகேடான வழிகளில் முதலீடுகளைத் திரட்டுவதைத் தடுப்பதற்கு சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது போன்ற கூட்டு முதலீட்டுத் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஓர் ஒழுங்குமுறை அமைப்பு தேவைப்படுகிறது. சிறிய முதலீட்டாளர்களின் சேமிப்புகள் பிரச்னைகளுக்கு உள்ளாகாமல் தடுக்க எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு செபி கடுமையாகப் பாடுபட்டு வருகிறது.

பொதுமக்களின் சேமிப்புகள் பத்திரமாக திரும்பக் கிடைக்க வேண்டும். சீட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் போடப்படும் முதலீடுகளுக்கு பாதிப்பு வரக்கூடாது. இதை உறுதிசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், "செபி'க்கு சட்டரீதியான வரையறைகள் உள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தொடர்பான குறிப்பிட்ட சில பிரச்னைகள் குறித்து நான் பேச முடியாது. ஏனெனில் அவற்றில் பல விஷயங்கள் குறித்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றார் யூ.கே.சின்ஹா.

இதனிடையே, சேமிப்புத் திட்டங்கள் அனைத்தையும் முடித்துக் கொள்ளுமாறும், முதலீட்டாளர்களுக்கு நிதியைத் திருப்பித் தருமாறும் சாரதா நிதி நிறுவனத்துக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.