தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் இன்று அறிமுகம்

மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 2:14 am

மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவுத் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் காங்கிரஸ் ஆளும் தில்லி, ஹரியாணா, அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஜூலை 5-ஆம் தேதி பிறப்பித்த அவசரச் சட்டத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவையில் முறைப்படி உணவுப் பாதுகாப்பு மசோதா மீது ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, மசோதாவில் திருத்தம் கோரி பாஜக, அதிமுக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த 305 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஆளும், எதிர்க்கட்சிகளிடையே நடைபெற்ற காரசார விவாதங்களின் முடிவில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறினால்தான் அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கும். ஆனால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தெலங்கானா, தமிழக மீனவர் விவகாரம், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கடந்த சில நாள்களாக எழுப்பி வந்தன. இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் முழுமையாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் முக்கிய அலுவல்களை மேற்கொள்ள வசதியாக, ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 6-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை திங்கள்கிழமை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவை மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் அறிமுகப்படுத்துவார் என்று மாநிலங்களவையின் திங்கள்கிழமை அலுவல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தங்களை வலியுறுத்துவோம்

மும்பை, செப்.1: மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் போது, அதில் திருத்தங்கள் இடம் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தம் என அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.

மும்பையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சில திருத்தங்களைக் கொண்டு வருமாறு வலியுறுத்துவோம். உணவுப் பாதுகாப்பு மசோதாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கையால்தான் தற்போது நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இதே காரணத்தால்தான் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருகிறது என டி.ராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.