பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாஜகவுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராஜீவ் சுக்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 2004-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங், பதவி விலக வேண்டும் என்று பாஜக 180 முறை கூறியுள்ளது. அவர்களின் வலியுறுத்தலுக்கு உடன்பட்டிருந்தால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நாடு 180 பிரதமரைச் சந்தித்திருக்கும்.
பாஜகவின் ஒரே நோக்கம், நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவதுதான். அவர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர், தனது பேச்சினால் நாடு முழுவதும் பிரபலமானவர் என்று தெரிவித்தார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், "நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சிபிஐயின் அறிக்கையில் அஸ்வனி குமார் எந்த மாற்றமும் செய்யவில்லை. அறிக்கையில் இருந்த எழுத்துப் பிழைகளைத்தான் சரி செய்தார் என்றார்.
நேரடி பண பரிமாற்றம் குறித்து கூறுகையில், இந்தக் கொள்கையின் மூலம் இடைத் தரகர்கள் பிரச்னை முடிவுக்கு வரும். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்தியப் பிரதேச அரசுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தும். நாடாளுமன்றத்தை பாஜக முடக்கியதால் உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








