

விவசாய நிலங்களில் சேரும் கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இச்செயல்களில் ஈடுபடும் விவசாயிகளின் மானியம் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்யவும் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ரந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நடுவர் நீதிபதி சுவதந்திரக் குமார் இன்று அளித்த தீர்ப்பில், விவசாய நிலங்களில் சேரும் கழிவுகளை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், மாநில அரசுகள் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையையும் தொடங்க வேண்டும் என்றார்.
ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் தில்லி ஆகிய அரசுகள் விவசாய கழிவுகளை எரிப்பதற்கு விதித்துள்ள தடையை கடுமையாக பின்பற்ற வேண்டும். விவசாய நிலங்களில் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்யவும் குமார் வலியுறுத்தினார்.
விவசாய கழிவுகள் குறித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொள்கையின்படி, கழிவுகளை எரிக்கும் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நில உரிமையாளரிடமிருந்து ரூ. 2500 அபராதமாக வசூலிக்க வேண்டும். ஐந்து ஏக்கருக்கு குறைவானவர்களிடமிருந்து ரூ. 5000ம், அதற்கு மேல் நிலம் உள்ளவர்களிடமிருந்த ரூ. 15,000 அபராதம் வசூலிக்கவும் நீதிபதி வலியுறுத்தினார்.
விவசாய கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான இயந்திரங்களை சிறு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் இணைந்து விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும்.
மேலும், மாநில நிர்வாகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, விவசாய கழிவுகளை எரிப்பதை கண்காணிக்கும் வகையில் ஒரு வழிமுறையை தயாரிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.