

தீவிரவாதிகள் எவ்வித பாகுபாடின்றி ஒடுக்கப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறினார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்தியா அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோகர் பரிக்கர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக அவர் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் அஸ்டன் கார்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர்கள் இந்தியா மற்றும் அமெரிக்க பகுதிகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்., அல்கெய்தா, லக்க்ஷர்-இ-தைபா, ஜெஸ்-இ-முகமது, தாவூத் கூட்டாளிகள், கக்கானி கூட்டணி மற்றும் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் குறித்து விவாதித்தனர்.
பின்னர் இரு நாடுகளும் இணைந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
தெற்கு ஆசியாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் ஒரு பெரும் சோதனையாகவே உள்ளன. அதுவும், தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு அதிக அச்சுறுத்தல்கள் உள்ளன என அந்த அறிக்கையில் கார்டர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதி 14 பேர்களை சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், தீவிரவாதிகள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுடன் விவாதித்து வருகிறது என்றார்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இரு நாடுகளும் தீவிர கவனம் செலுத்தும் என்ற கார்டர், இது விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றார்.
இதனிடையே, சிரியா மற்றும் லிபியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிரான கூட்டுப்போரில் இந்தியா பங்கேற்காது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை அனுமதித்துள்ள அமைதியை ஏற்படுத்தும் திட்டங்களில் மட்டுமே பங்கேற்பது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எனினும், தீவிரவாதிகள் குறித்த ரகசியங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளும் என்றார் பரிக்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.