

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆவணங்களை பிப்ரவரி மாதத்துக்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு யு.எஸ். பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல் அமைச்சராக இருந்த போது நிகழ்ந்த கவலரங்களைத் தொடர்ந்து, அவருக்கு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டது.
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அரசின் சட்டத்தின் கீழ் விசா மறுக்கப்பட்ட ஓரே நபர் மோடி மட்டும்தான்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட விசா, 2014-ல் மோடி இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் இருமுறை அமெரிக்கா சென்றுவிட்டார்.
இந்நிலையில் மோடிக்கு வழங்கப்பட்ட விசா நடைமுறைகள் குறித்த ஆவணங்களை, தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் தருமாறு, அமெரிக்காவில் இயங்கும் சீக்கிய அமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியது.
எனினும், ஆவணங்களை அரசு தராததால் அந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அமெரிக்க அதிபர்கள் புஷ், ஒபமா ஆகியோரது ஆட்சிகாலத்தில் மோடிக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் தடைநீக்கம் குறித்த முக்கியமான ஏழு ஆவணங்களை கேட்டு அந்த அமைப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது.
வழக்கை கடந்த 9 ஆம் தேதி விசாரித்த நீதிபதி, அமெரிக்க அரசு மோடியின் விசா குறித்த ஆவணங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சமர்பிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 29 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.