

ஹரியாணா மாநிலத்தில் தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேச்சு தரக்குறைவாக இல்லை என்று தில்லி போலீஸார் கூறினர்.
ஹரியாணா மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டுக்கு வேறொரு சமூகத்தினர் தீ வைத்ததில், அவரது குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, மத்தியிலும், ஹரியாணாவிலும் ஆளும் பாஜக அரசுகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான வி.கே. சிங், "யாரேனும் நாய் மீது கல் எறிந்தால், அதற்கும் மத்திய அரசைக் குறை சொல்வதா?' என்று கேள்வி எழுப்பியியிருந்தார்.
அமைச்சரின் இக்ருத்துகுக்கு நாடு முழுவதும் இருந்த பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து தில்லியை சேர்ந்த வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் கௌதம், போலீஸில் புகார் செய்தார். போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்ததையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த தில்லி பெருநகர நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து எடுத்த நடவடிக்கை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தில்லி போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த போலீஸார், அமைச்சர் வி.கே. சிங், யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகம் தொடர்பான வன்கொடுமை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு அதில் தரக்குறைவான மற்றும் அவமானகரமான கருத்துகள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர், போலீஸின் பதிலில் உண்மை இல்லை. அமைச்சர் வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்து பேசியுள்ளார். இது சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி முன்னீஸ் கார்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.