

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நடைமுறைகள் குறித்த எவ்வித வரைவு அறிக்கையையும் மத்திய அரசு தயார் செய்யாது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஏற்கெனவே உள்ள நீதிபதிகளே நீதிபதியை நியமிக்கும் 'கொலிஜியம்' முறையை தொடரும் என்றும் அறிவித்தது. மேலும், கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகளையும் வரவேற்றது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக நீதிபதிகளை 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த வரைவை தயாரிக்குமாறு நேற்று மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டானி ஜெனரல் முகுல் ரோஹத்கி, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த எந்த வரைவையும் அரசு தயாரிக்காது என்றார்.
மேலும், இம்முயற்சியை கைவிட்டு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் முன்வரவேண்டும் என்றார். எங்கேயாவது ஒர் இடத்தில் இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் அட்டானி ஜெனரல்.
முன்னதாக நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு மூன்று அடுக்கு வழிமுறைகளை முன்மொழிந்திருந்தது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட வேண்டும், நியமிக்கப்படும் நீதிபதிகள் எந்த அரசியல் கட்சியிலாவது உறுப்பினராக இருந்தால் அதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.