

திருவனந்தபுரம்: உச்சக்கட்டப் பாதுகாப்புடன், குடும்பத்துடன் முதல்வர் வசிக்கும் வீட்டில் எப்படி பாலியல் பலாத்காரம் நடைபெற முடியும் என சரிதா நாயருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் உம்மன் சாண்டி குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் சூரியதகடு விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி, தன்னிடம் அத்து மீறி நடந்ததாக சரிதா நாயர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறி 25 பக்கங்களைக் கொண்ட கடிதத்தை கடந்த ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கேரளத்தில் செயல்படும் இரு மலையாள தொலைக்காட்சிகள் வெளியிட்டன.
இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான தகவலைக் கூறியதாக சரிதா நாயர் மீதும், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட 2 மலையாளம் தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றித்தில் உம்மன் சாண்டி தொடர்ந்துள்ள வழக்கு விவரம்:
முதல்வர் தனது அதிகாரபூர்வ இலத்தில், உச்சக்கட்ட பாதுகாப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் இல்லத்தில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றதாக கூறுவது என்பது பொது அறிவு இல்லாததையேக் காட்டுகிறது.
மேலும், மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் நோக்கிலேயே சரிதா நாயர் எழுதியதாக கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரிதா நாயார் இதற்கு முன்பாக பலமுறை அளித்துள்ள தொலைக்காட்சி நேர்காணலில் ஒருபோதும் நான் அவரிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்ததாக கூறவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சரிதா நாயர் மீதும் செய்தியை வெளியிட்டவர்கள் மீதும் அவதூறு வழக்குப் பதிவு செய்வதோடு, குற்றசதியில் ஈடுபட்ட வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் சாண்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.