

அரசியல் நெருக்கடி நிலவி வரும் அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கு புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் 14 சிலர் அக்கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் குவஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேரவைத் தலைவர் உத்தரவுக்கு தடை விதித்தது.
இதனிடையில், அரசியல் நெருக்கடி நிலவியதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஆளுநர் பரிந்துரைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அருணாசல பிரதேசத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும், புதிய அரசு அமைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், குவஹாட்டி நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து இன்று ஆய்வு செய்வதாகவும் கூறியது.
இன்று குவஹாட்டி நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த ஆவனங்களை ஆய்வு செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, குவஹாட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என தீர்மானித்தனர். எனினும், இதுகுறித்த வழக்கை குவஹாட்டி உயர் நீதிமன்ற அமர்வு இரண்டு வாரங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், அருணாசல பிரதேசத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நேற்று பிறப்பித்த உத்தரவையும் விலக்கிக் கொண்டனர்.
இதனால், அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் பாரதீய ஜனதா அரசு அமைக்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.