/

இந்தியாவில் இருந்து நான்கு தூதரக அதிகாரிகளை வாபஸ் பெறுகிறது பாகிஸ்தான்?

இந்தியாவில் பணியிலிருக்கும் நான்கு தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் வாபஸ் பெற உள்ளதாக பாகிஸ்தான் மீடியாவில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:50 am

DIN

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பணியிலிருக்கும் நான்கு தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் வாபஸ் பெற உள்ளதாக பாகிஸ்தான் மீடியாவில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உளவு வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறையிடம் இருந்து  தில்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவாக காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தான் உளவாளிகள் மெக்மூத் அக்தர், மவுலானா ரம்சான்கான் என்ற ஹஸ்ரத் மற்றும் சுபாஷ் ஜாங்கிர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து இந்திய ராணுவ ரகசிய வரைபடங்கள், எல்லை பகுதிகளில் அமர்த்தப்பட்டுள்ள படையினர் பற்றிய விவரங்கள், ஓய்வு பெற்ற, இட மாறுதல் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை, ராணுவ உயர் அதிகாரிகள் பட்டியல், விசா தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காவல்துறையினரின் விசாரணை முடிவில் மெக்மூத் அக்தர் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் விபரம் தெரிய வந்தது. அது உண்மைதான் என்பது வெளியுறவுத்துறை அமைச்சரகம் மற்றும் பாகிஸ்தான் தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான உளவு வேலையில் ஈடுபட்டதால் மெக்மூத் அக்தர் பாகிஸ்தான் தூதரக பணியில் நீடிக்க முடியாது என்று அறிவித்த இந்தியா, மெக்மூத் அக்தரும், அவரது குடும்பத்தினரும் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கடந்த 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

இதற்கு எதிர்வினையாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் நான்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற பாகிஸ்தான் அரசு முடிவு செய்து உள்ளது என்று பாகிஸ்தானில் இருந்து இயங்கும் டான் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சையத் பரூக் ஹபிப் மற்றும் முதன்மை செயலாளர்கள் காதீம் ஹுசைன், முதாஸ்சார் சீமா மற்றும் ஷாஹித் இக்பால் ஆகியோரே திரும்ப அழைத்துக் கொள்ளப்பட  உள்ள அதிகாரிகள் என்ற தகவலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.