திருச்சூர்: கேரள தொலைக்காட்சி நடிகை ரேகா மோகன் அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.
மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை ரேகா மோகன். இவர் 1990-ஆம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் புகழ் வாய்ந்த நடிகையாகத் திகழ்ந்தவர். பிரபல நட்சச்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது பல டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவரது சொந்த ஊரான திரிசுரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவரான மோகன் மலேசியாவில் உள்ளார். தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. ரேகா மோகன் வசித்து வந்த வீடு கடந்த இரண்டு நாட்களாக பூட்டியே இருந்துள்ளது.
ரேகா சாதாரணமாக படப்பிடிப்பு சம்பந்தமாக அடிக்கடி வெளியே சென்று விடுவதால் அக்கம் பக்கத்தினர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ரேகாவின் கணவர் மோகன் மலேசியாவில் இருந்து அவருக்கு அடிக்கடி போன் செய்தும் ரேகா எடுக்கவில்லை. இதனால் மோகன் தனது நண்பர்களுக்கு தகவல் அனுப்பி, வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
நண்பர்கள் போலீசாரின் உதவியுடன் ரேகாவின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, ரேகாவின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான சபர்ணா, நேற்று முன்தினம் அவரது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.