புதுதில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 'துல்லிய தாக்குதல்கள்' தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 7 தீவிரவாத முகாம்கள் அளிக்கப்பட்டதுடன், 35 தீவிரவாதிகளும் பலியாகினர்.
ஆனால் இத்தகைய தாக்குதல் எதுவும் நடக்கவேயில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்தியாவில் சில அரசியல் கட்சிகளும், இந்த தாக்குதலுக்கான ஆதாரத்தை அரசு வெளியிட வேண்டும் என்று கூறிவந்தன.
இந்நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் ராணுவத்தால் அரசிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன.முதலில் அது தொடர்பான கோப்புகள் வழங்கப்பட்டன. தற்போது வீடியோ பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.