ஜம்மு: இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர் மரணம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை காலை 9.35 மணிக்கு, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த குர்ணம் சிங் என்ற இந்திய வீரர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குர்ணம் சிங் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இது பற்றி குர்ணம் சிங்கின் தந்தை கல்பீர் சிங் பேசுகையில், “என்னுடைய மகன் மிகவும் தைரியமானவன். அவன் உயிரை நாட்டிற்கு தியாகம் செய்து உள்ளான்.” என்று தெரிவித்தார்.