மத்திய அரசின் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முக்கிய வரி சீர்திருத்தமாக மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள ஜி.எஸ்.டி மசோதா கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு, பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இது தொடர்பான மசோதா சமீபத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 16 மாநிலங்கள் இது தொடர்பாக மாநில சட்டசபையில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றின. அதன் பின்னர் இது தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வியாழன் அன்று ஜனாதிபதி ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஒப்புதலை அளித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை நாடு முழுவதும் அமல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.