
குஜராத் மாநில காவல்துறை தலைவராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் பெண் அதிகாரி கீதா ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அந்த மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
குஜராத் காவல்துறை தலைவராக பதவி வகித்த பி.பி. பாண்டே, உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராக உத்தரவிட்டதையடுத்து பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்தப் பதவியில், 1982-ஆம் ஆண்டைய ஐபிஎஸ் அதிகாரியான கீதா ஜோரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், 'காந்திநகரில் இருக்கும் குஜராத் காவல்துறை வீட்டுவசதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கீதா ஜோரிக்கு கூடுதல் பொறுப்பாக டிஜிபி பதவி அளிக்கப்படுகிறது. முந்தைய டிஜிபி பி.பி. பாண்டேக்கு அளிக்கப்பட்டிருந்த பதவி நீட்டிப்பு உத்தரவும் திரும்பப் பெறப்படுகிறது' என்றார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு மூண்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஜோரியும் இடம்பெற்றிருந்தார். ஆனால், பின்னர் அக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், சொராபுதீன், துளசி பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார். பிறகு அந்த வழக்கில் அவர் மீதும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து ஜோரியை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு விடுவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.