தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வி.கே.சசிகலா தரப்புக்கு சாதகமாக பெற ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்காக தில்லி சாணக்கியபுரி காவல் நிலைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் டி.டி.வி.தினகரனிடம் இரண்டாவது நாளாக{ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது.
இதுகுறித்து தில்லி காவல் துறை வட்டராங்கள் கூறுகையில், "டி.டி.வி. தினகரனிடம் சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அவரிடம் கேட்கப்பட்ட எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கும், பிற கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
இதனால், அவரையும், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், அவரது நண்பரும், பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகியோரையும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தோம்.
இதன்படி, மூவரும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தனர்.
மூவரிடமும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா, உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்' என்று தெரிவித்தன.