புதிதாக வெளியிடப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளதாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தெரிவித்தது.
மத்திய அரசு இரண்டு வெவ்வேறு அளவுகளில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளதாகவும் இது மிகப்பெரிய ஊழல் என்றும் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டின. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கு முன்பாக, கடும் அமளிக்கு இடையில் இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டின் அளவானது 66 மி.மீ.க்கு 150 மி.மீ. ஆகும். அதேபோல் புதிய 2000 ரூபாய் நோட்டின் அளவானது 66 மி.மீ.க்கு 166 மி.மீ. ஆகும் என்று மேக்வால் தனது பதிலில் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், அவை அலுவல்களை முடக்குவதற்காக, முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல், அற்பமான விஷயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, மற்றொரு கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் மேக்வால் அளித்த பதிலில், 'தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி நாட்டின் சில பகுதிகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் அவை தரத்தில் மட்டமானதாக உள்ளன. உயர் தரத்திலான புதிய கள்ள நோட்டுகளை இதுவரை எந்தப் புலனாய்வு அமைப்பும் பறிமுதல் செய்யவில்லை' என்று தெரிவித்தார்.