புது தில்லி: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு மிகச்சரியே என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.
தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
ஆதார் விவரங்களால் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என்று 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில், 9 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் அடிப்படை உரிமையை அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு உறுதி செய்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் ஆதரவு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியே என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.