புது தில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பிரதமரால் அறிவிக்கப்பட்ட திட்டமா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 99% அளவுக்கு திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ஆர்பிஐ நேற்று அறிவித்திருந்தது.
இது குறித்து தனது டிவிட்டரில் கருத்துக் கூறியுள்ள சிதம்பரம், "99% நோட்டுகள் சட்டப்படி மாற்றப்பட்டுவிட்டது! கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்டதா பணமதிப்பிழப்பு திட்டம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, "இந்த திட்டத்தின் மூலம் ஆர்பிஐக்கு ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ.21 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இதுபோன்ற பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும்" என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது புழக்கத்தில் இருந்த 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் ரூ.1,544 ஆயிரம் கோடி மதிப்புள்ள பண நோட்டுகள் வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. அதன்படி 1% ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை. இன்னும் ஏதோ ஒரு வகையில் பொதுமக்களிடமே இருக்கிறது என்று அர்த்தம்.