கான்பூர்: போதிய மின்சார வசதி இல்லாத காரணத்தால் உத்தரப்பிரதேச மருத்துவமனை ஒன்றில் 32 கண்புரை நோயாளிகளுக்கு, டார்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உபியின் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றில் திங்கள் அன்று கண்புரை அறுவைசிகிச்சை முகாம் நடந்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால், அதற்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் 32 நோயாளிகளுக்கு மருத்துவர்கள் டார்ச் லைட்டை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அத்துடன் முகாமில் பங்கேற்ற நோயாளிகள் சிலரின் உறவினர்கள் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர். கடுமையாக குளிரில் உரிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் தரையில் படுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:
இந்த சம்பவம் பற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உண்மையில் தவறு நடந்திருந்தால், முகாம் நடத்திய நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.