மொத்தம் 68 இடங்களைக் கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 44 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
எனினும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான பிரேம்குமார் துமல் தாம் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் சுமார் ஒரு வார காலமாக இழுபறி நிலவியது.
இறுதியில் ஜெய்ராம் தாக்குர் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, சிம்லாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் பகல் 11 மணிக்கு நடந்த விழாவில் ஹிமாசலப் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் புதன்கிழமை பதவியேற்றார்.
அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், பதவியேற்பு விழா முடிந்து திரும்புகையில் பிரதமர் நரேந்திர மோடி, சிம்லாவின் மால் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்தியன் காஃபி ஹவுஸில் காஃபியை ருசித்தார்.
முன்னதாக, கட்சி ரீதியிலான பணிகளுக்காக ஹிமாசலப் பிரதேசம் வரும் நரேந்திர மோடி, இந்த புகழ்பெற்ற இடத்தில் காஃபி அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அங்கு மீண்டும் தற்போது காஃபியை ருசித்தபடி தனது நினைவலைகளில் ரசித்தார் பிரதமர் மோடி.