நாடாளுமன்றத்தில் தாக்கலானது முத்தலாக் தடை மசோதா!

இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை நிலைநாட்டும் முத்தலாக் தடை மசோதாவினை  நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் தாக்கலானது முத்தலாக் தடை மசோதா!

புதுதில்லி: இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை நிலைநாட்டும் முத்தலாக் தடை மசோதாவினை  நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க உடனடியாக மூன்று முறை தலாக் என்று கூறும்  "முத்தலாக்" நடைமுறையை சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நடைமுறையை சட்டவிரோதம் என்று அறிவித்தது. எனினும், அந்த நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.

இதைக் கருத்தில் கொண்டு, உடனடி முத்தலாக் நடைமுறைக்கு சட்டரீதியில் தடை விதிக்கும் வகையிலும், அதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகளில் பாதுகாப்பு) மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள முத்தலாக் தடை  மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைகளுக்கு இடையேயான குழு உருவாக்கியது. இதையடுத்து, மாநிலங்களின் ஒப்புதலுக்காக அதை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இந்த மசோதாவின் படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானதும், தடையை மீறி உடனடி முத்தலாக் நடைமுறையை கடைப்பிடிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல், பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தை அணுகி, தனக்கும், தனது வாரிசுக்கும் நிவாரணம் பெற்றுத் தர கோரிக்கை விடுக்க முடியும். 

இதைத் தொடர்ந்து, தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்பின்னர், மக்களவையில் அந்த மசோதாவை கடந்த வாரம் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருந்தது. மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருந்த மசோதாக்களின் பட்டியலிலும் அந்த மசோதா பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், அந்த மசோதா, மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

அதன்படி வியாழன் அன்று முத்தலாக் தடை மசோதாவினை  நாடாளுமன்றத்தில் சில எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com