புதுதில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்பை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிஅழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றார்.அதனைத் தொடர்ந்து டிரம்ப்புடன் செவ்வாய்க்கிழமை பின்னிரவு பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருமாறும் அவருக்கு மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியாவது:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் நேற்று மாலை சுமுகமான உரையாடல் நிகழ்த்தினேன். வரக்கூடிய நாட்களில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து உழைப்பதாக இருவரும் உறுதியேற்றுக் கொண்டோம்.
இவ்வாறு மோடி தெரிவித்தார். இந்த தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவை ஒரு உண்மையான நண்பனாக ட்ரம்ப் கருதுகிறார். இரு தலைவர்களும் வியாபாரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். இந்த வருட பின்பகுதியில் அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.