பெங்களூரூ: கர்நாடக முன்னாள் முதல்வரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வராகவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பொழுது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் இன்று மாலை திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் அண்மைக்காலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம் கட்டப்பட்டு வருவதாக அவர் தீவிர அதிருப்தியில் இருந்தார். அதனால்தான் அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும், இனி அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.