மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது போல, பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும் வீழ்ச்சியடையும் என்று சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பிருஹன் மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் சுதிர் முங்கண்டிவார், ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட இழப்பீட்டு தொகைக்கான முதல்கட்ட காசோலையை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பாஜக கவுன்சிலர்கள், பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு சிவசேனை தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைவர்களை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தச் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள தலையங்கத்தில், பாஜக தொண்டர்களின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிருஹன் மும்பை மாநகராட்சி நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் பெயரை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? முதல்வரும், பாஜக தலைவரும், இந்த கேள்வியை தங்களுக்குத் தானே கேட்க வேண்டும். இந்த இழப்பீட்டு நிதியானது, பாஜகவின் கருவூலத்தில் இருந்து அளிக்கப்படவில்லை. அதேபோல், அந்த நிதி, சிவசேனையின் கருவூலத்துக்கு செல்லப் போவதும் கிடையாது. மும்பையில் நலத் திட்டங்களுக்குதான் அந்த நிதி செலவிடப் போகிறது.
தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாக கோஷம் எழுப்புவோர், உண்மையில் அவரது நற்பெயருக்கு களங்கத்தையே ஏற்படுத்துகின்றனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவரை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 'இந்திராதான் இந்தியா' என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி, நாட்டையே அவமதித்தனர். இதையடுத்து ஏற்பட்ட புரட்சியே, இந்திரா காந்தியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
உண்மையில் கடந்த 1971- ஆம் ஆண்டில் பாகிஸ்தானை போரில் தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல், அந்நாட்டை 2ஆக பிரித்து, மண்டியிடச் செய்தவர் இந்திரா காந்தி. இந்நிலையில், பாஜகவுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இந்திரா காந்தியின் தோல்விக்கு அவரது ஆதரவாளர்கள் காட்டிய, அதீத இந்திரா பக்தியே காரணமாகும். உலகமே ஒரு நேரத்தில் மோடிக்கு எதிராக இருந்தபோது, அவருக்கு சிவசேனை ஆதரவாக இருந்தது. அவருக்கு ஆதரவாக தற்போது கோஷமிடுவோர், அப்போது அச்சத்தினால் மௌனமாக இருந்தனர்.
சிவசேனையின் நண்பனான பாஜக, தனது ஆதரவாளர்களைக் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது மோடிக்கு ஆதரவாக கோஷமிடும் அவர்கள், நாளை அவரது வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம் என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.