நாடாளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டபோது அவர்களைத் தடுக்காமல் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைதியாக அமர்ந்திருந்தார் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: மக்களவை அலுவல்கள் தொடங்கியதும், அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் இருக்கையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் காகிதங்களை கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களைக் கட்டுப்படுத்தாமல் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைதியாக இருந்தார்.
இது ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு தினம் ஆகும். அவர் அமைதியாக இருந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் செயல் மன்னிக்க இயலாத ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் பாஜக எம்.பி.க்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு அவையை அவமதிப்பு செய்ததில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னை குறித்து விவாதிப்பதற்கு அனுமதியளிக்க அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தயாராக இருந்தார் என்று அனந்த் குமார் தெரிவித்தார்.
வன்முறை கும்பல்களால் சிலர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.