இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாரை ரயிலில் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது.
இதற்கு முன்பு தபால் மூலம் வீட்டு அனுப்பி வைக்கப்படும் ஆதார் அட்டை மட்டுமே ரயிலில் அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் இ-ஆதார் அட்டையை ஏற்றுக் கொண்டால், மிகவும் வசதியாக இருக்கும். செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள இ-ஆதார் அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டுவது பயணிகளுக்கு எளிதாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த ரயில்வே, அதனை ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தது. அதன்படி, இனிமேல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் இ-ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட 10 ஆவணங்களை ரயிலில் அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.