ஷிம்லா: கடந்த மாதம் ஷிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் கோடை வாசஸ்தல மாளிகையினுள் அனுமதி மறுக்கப்பட்டவர், இந்த மாதம் ஜனாதிபதி வேட்பாளரான வினோதம் நிகழந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர் பிகார் கவர்னரான ராம்நாத் கோவிந்த். இவர் இதற்கு முன்பாக பாஜக செய்தித் தொடர்பாளராகவும், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் ஹிமாசலப்பிரதேசத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஷிம்லாவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பல்வேறுஇடங்களையும் அவர் குடும்பத்ததுடன் சுற்றி பார்த்திருக்கிறார்.
ஷிம்லாவில் இருந்து 15 கிலோமீட்டரில் உள்ளது மஷோப்ரா மலைப்பகுதி. இங்குதான் இந்திய ஜனாதிபதியின் கோடைகால வாசஸ்தல மாளிகை உள்ளது. இங்கு வருடத்திற்குக்கு குறைந்த பட்சம் ஒரு முறையாவது ஜனாதிபதி வருகை தருவார். அப்பொழுது எல்லாம் இந்த மாளிகையானது, அவரது முதன்மை அலுவலகமாகச் செயல்படும். எனவே இந்த பகுதியானது பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.
இந்த இடத்திற்கு வந்த ராம்நாத் ஜனாதிபதி மாளிகைக்குள் சுற்றிப்பார்க்க விரும்பினார். ஆனால் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள், அதற்கு உரிய முன் அனுமதியினை அவர் பெறவில்லை என்று கூறி அவரை உள்ளே விட மறுத்து விட்டனர். எனவே அவர் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லாமல் திரும்பி விட்டார்.
தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ராம் நாத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பாரதியா ஜனதாவுக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக அவர் வெற்றி பெறுவது உறுதி.
எனவே முறையான அனுமதி இல்லை என்று கூறி தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட, ஷிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் அதே கோடைவாசஸ்தல மாளிகைக்கு , விரைவில் ராம்நாத் ஜனாதிபதியாகவே திரும்பும் சந்தர்ப்பமும் அமையும்.