புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி கலையரங்கத்தில் நாளை மாலை இரு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக, பாலிவுட் நடிகர் அமீர்கானின் 'டங்கல்' திரைப்படம் திரையிடபட உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் அனூப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்களின் முன் முயற்சியினால், பிரபல நடிகர் அமீர்கான் நடித்த திரைப்படமான 'டங்கல்' நாளை மாலைஇரண்டு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக திரையிடப்பட உள்ளது.
நாளை இரண்டு அவைகளின் செயல்பாடுகள் முடிந்தவுடன் மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி கலையரங்கத்தில் திரையிடல் நடைபெற உள்ளது. மகளிர் முன்னேற்றம் தொடர்பான ஒரு நல்ல கருத்து சொல்லியிருக்கும் இந்த திரைப்படத்தை பார்ப்பதன் மூலம், அது தொடர்பான பணிகளை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் செய்யலாம் என்பதும் திரையிடலுக்கான ஒரு காரணமாகும். இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற செயலகத்தின் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டங்கல் திரைப்படமானது மல்யுத்த வீரன் ஒருவன் எவ்வாறு தனது இரண்டு பெண்களையும் மல்யுத்த துறையில் பயிற்சி கொடுத்து பதக்கம் வெல்லும் வீரங்கனைகளாக மாற்றுகிறான் என்பதை பற்றி பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.