ராஜீவ் கொலை வழக்கு விசாரணை எப்போது முடிவடையும்? சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்புடைய விசாரணை எப்போது முடிவடையும்? என மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை எப்போது முடிவடையும்? சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்புடைய விசாரணை எப்போது முடிவடையும்? என மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
இது தொடர்பான வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சிபிஐ விசாரிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாகச் செயல்படுகிறது' என முறையிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் சார்பில் மூத்த வழக்குரைஞர் கொலின் கொன்சால்வேஸ், வழக்குரைஞர் பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி முன்வைத்த வாதம்:
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தின் பின்னணி, சதி தொடர்பாக பல்நோக்கு விசாரணை குழு நடத்தி வரும் விசாரணை எந்த நிலையில் உள்ளது? எப்போது அதன் விசாரணை முடிவடையும்? இந்த விசாரணை யாராவது ஒரு நபரை நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் கூட்டுச் சதி செய்ததாக பேரறிவாளன் தண்டிக்கப்பட்டுள்ளார். எனவே, சதிச் செயலின் நோக்கம் தொடர்பான விசாரணையை சிபிஐ தலைமையில் செயல்படும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த விவகாரத்தில் தொடர்புடைய பலரும் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அவர்களிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டின் மிக உயரிய விசாரணை அமைப்பாக சிபிஐ உள்ளது.
ராஜீவ் கொலைச் சம்பவத்தின் பின்னணி, சதித் செயல் பற்றிய விசாரணையை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிபிஐ விசாரிக்கப் போகிறது? அந்த விசாரணை எப்போது முடியும்? இந்த விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை விவரத்தை நான்கு வாரங்களுக்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com