அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் சமரசத்தை விரும்பாவிட்டால் அப்பிரச்னையை உச்ச நீதிமன்றமே தீர்த்து வைக்கும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சுவாமி லக்னௌவில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது ஹிந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் சமரசத்தை விரும்பாவிட்டால் அப்பிரச்னையைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்றம் உள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பிறந்த இடம் அயோத்தியே என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து கேள்வி எழுப்பினால், அயோத்தியைத் தவிர முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் மசூதியை கட்டிக் கொள்ளட்டும். ஆனால், ராம ஜென்மபூமியில் மசூதி கட்டப்படக் கூடாது.
அயோத்தியில் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்பதை முஸ்லிம் மதகுருக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ராமர் கோயில் ஆதரவாளரான முதல்வர் யோகியுடன் சுவாமி எந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறித்து தகவல் இல்லை.