புதுதில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்துடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு ஆறு மாத சிறைதண்டனை அளித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் நீதிபதி கர்ணன் முன்பே சென்னை புறப்பட்டு விட்டதால் அவரை கைது செய்ய மேற்கு வாங்க காவல்துறை துணைப்படை ஒன்று சென்னைக்கு விரைந்தது.
ஆனால் அவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு சென்று விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால்,காவல்படை அங்கும் சென்றது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார்; எங்கும் தலைமறைவாகி சென்று விடவில்லை என்று அவரது வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு மாத சிறைத்தணடனையை திரும்ப பெறுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை கர்ணன் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.