திருவனந்தபுரம்: அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ காரில் கேரள நடிகை ஒருவருக்கு 'லிப்ட்' கொடுத்து, அவருடன் பயணம் செய்த கேரள மாநில சிறைத்துறை அதிகாரி மீது தற்பொழுது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநில சிறைத்துறை டிஐஜியாக இருப்பவர் பி.பிரதீப் . இவர் கடந்த மார்ச் மாதம் பத்தனம்திட்டா மாவட்ட சிறையில் நடந்த சிறை நாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார். வரும் வழியில் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ காரில், கேரள நடிகை ஒருவருக்கு 'லிப்ட்' கொடுத்து, அவரை அழைத்து வந்ததாக தற்பொழுது அவர் மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த நடவடிக்கை குறித்து மாநில முதல்வரிடம் அதிகாரபூர்வமற்ற வகையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்குமாறு சிறைத்துறை தலைமை அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீலேகா சிறைத்துறை ஐஜிக்கு இந்த புகார் அனுப்பப்பட்டுள்ளது என்றும்,அவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்தார்.